தஃப்சீர் இப்னு கஸீர்

பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)

2 : 4 அல்பகரா

4. (நபியே!) அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தையும் உமக்கு முன்னர் அருளப்பெற்றவைக(ளான வேதங்க)ளையும் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.

(இறையச்சமுடையோரின் மேலும் சில பண்புகளை இவ்வசனம் விவரிக்கிறது. இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றுள்ள குர்ஆன் எனும் இந்த வேதத்தையும், முந்தைய இறைத்தூதர்களுக்கு அருளப்பெற்ற வேதங்களையும் உண்மையென அவர்கள் நம்புவார்கள். இறப்புக்குப் பின்னுள்ள மறுமை வாழ்க்கை உண்மையெனவும் அவர்கள் நம்புவார்கள்.)

அதாவது (நபியே!) அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்துள்ள வேதத்தையும், உங்களுக்குமுன் வந்த இறைத்தூதர்களுக்குக் கிடைத்த வேதங்களையும் அவர்கள் உண்மையென ஏற்பார்கள். இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டமாட்டார்கள்; அவர்களுக்கு இறைவன் வழங்கியவற்றை மறுக்கமாட்டார்கள். மறுமையை, அதாவது இறப்புக்குப்பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும், உலக அழிவையும், சொர்க்கம், நரகம், விசாரணை, தராசு ஆகியவற்றையும் நம்புவார்கள்- என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.

‘மறுமை’ என்பதைக் குறிக்க ‘ஆகிரத்’எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இதற்குப் ‘பிந்தியது’ என்று பொருள். இம்மைக்குப் பிறகே மறுமை வருவதால் அதற்கு இப்பெயர் வரலாயிற்று.

இந்த வசனத்திலும் (4) இதற்கு முந்தைய வசனத்திலும் (3) குறிப்பிடப்பெற்றுள்ளவர்கள் ஒரே இனத்தாரா, அல்லது வெவ்வேறு இனத்தாரா என்பதில் விரிவுரையாளர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. அவர்களுடைய கருத்துகளை மூவகைப்படுத்தி இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்:    

1) இரு வசனங்களுமே ஒரே பிரிவினரைத் தான் குறிப்பிடுகின்றன. முதலில் இணை வைப்பாளர்களாக இருந்து பின்னர் இறை நம்பிக்கை கொண்ட அரபுகளானாலும், முதலில் வேதக்காரர்களாக இருந்து பின்னர் இஸ்லாத்தைத் தழுவியவர்களானாலும்பொதுவாக எல்லா இறைநம்பிக்கையாளர்களையும் குறிக்கும்.

2) முதலில் வேதக்காரர்களாக இருந்து பின்னர் இஸ்லாத்தைத் தழுவிய இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமே இரு வசனங்களிலும் குறிப்பிடப்படுகின்றனர்.

இவ்விரு கருத்துகளின்படியும், இரு வசனங்களும் (3,4) ஒரே பிரிவினரைக் குறிப்பிடுவதாக அமைவதால், இரு வசனங்களுக்கிடையே இடம்பெற்றுள்ள இணையிடைச் சொல்லான ‘வாவு’ எனும் சொல் இங்கே வேறுபாட்டைக் குறிக்காது.

மாறாக, ஒரே பிரிவினரின் பண்புகளில் ஒன்றை மற்றொன்றுடன் இணைப்பதையே இது குறிக்கும். எடுத்துக்காட்டாக, ‘‘(நபியே!) உயர்ந்தவனான உம் இறைவனின் நாமத்தைத் துதிப்பீராக! அவனே (அனைத்தையும்) படைத்துச் சீராக்கினான். அவனே (நெறிமுறைகளை) வகுத்து வழிகாட்டினான்’’ (87:1-3) எனும் வசனங்களைக் கூறலாம்.

இவ்வசனங்களின் இடையே இடம்பெற்றுள்ள இணையிடைச் சொற்கள் (‘வாவு’ மற்றும் ‘ஃபா’) அல்லாஹ் என்ற ஒருவனின் பண்புகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறுவதைக் காட்டவே வந்துள்ளன.

3) ‘‘அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்’’ எனத் தொடங்கும் (3ஆம்) வசனம், முதலில் இணைவைப்போராக இருந்து பின்னர் இறைநம்பிக்கை கொண்ட அரபுகளையும், ‘‘உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தையும் உமக்கு முன்னர் அருளப்பெற்றவற்றையும் நம்புவார்கள்’’ எனத் தொடங்கும் (4ஆம்) வசனம், முதலில் வேதக்காரர்களாக இருந்து பின்னர் இஸ்லாத்தைத் தழுவிய இறைநம்பிக்கையாளர்களையும் சுட்டும். இக்கருத்தையே இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இந்த (மூன்றாம்) கருத்தே பொருத்தமானது என்பதற்குப் பின்வரும் வசனங்களையும் நபிமொழியையும் சான்றுகளாக அவர்கள் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் மீதும், உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், அவர்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொள்ளக்கூடியோர் வேதக்காரர்களில் உள்ளனர். (3:199)

இதற்குமுன் யாருக்கு நாம் வேதத்தை வழங்கியுள்ளோமோ அவர்களும் இவ்வேதத்தை நம்புகிறார்கள். அவர்களுக்கு இது ஓதிக்காட்டப்பட்டால், ‘நாங்கள் இதை நம்புகிறோம், நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும்; இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும்) வழிபட்டவர்களாகவே இருந்தோம்’ என்று கூறுவார்கள். (28:52,53)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர் தங்களின் (நற்செயல்களுக்காக) இரு தடவை பிரதிபலன் வழங்கப்பெறுவர். ஒருவர், தம்முடைய நபியை நம்பிக்கை கொண்டதுடன் என்னையும் நம்பிக்கை கொள்கிற வேதக்காரர்.

மற்றொருவர் தம் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் எசமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றுகிற அடிமை. இன்னொருவர் தம் அடிமைப் பெண்ணுக்கு நல்லொழுக்கம் போதித்துப் பின்னர் விடுதலை செய்து அவளையே திருமணம் செய்துகொள்பவர்.25

இக்கருத்துகளிலெல்லாம் முஜாஹித் (ரஹ்) அவர்களது கருத்தே தெளிவானது. அவர்கள் கூறினார்கள்:

அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்ப நான்கு வசனங்கள் (2-5) இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் குறித்தும், அடுத்த இரு வசனங்கள் (6,7) இறைமறுப்பாளர்களின் பண்புகள் குறித்தும், அடுத்த பதிமூன்று வசனங்கள் (8-20) நயவஞ்சகர்களின் பண்புகள் குறித்தும் பேசுகின்றன. ஆகவே, ஆரம்ப நான்கு வசனங்கள், அந்தத் தன்மை உள்ள எல்லா இறைநம்பிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

அரபியர், அரபியரல்லாதோர், வேதக்காரர்கள், மனிதர்கள் மற்றும் ஜின்கள் என அனைவரும் இதில் அடங்குவர். இவ்வசனங்களில் குறிப்பிடப்பெற்றுள்ள பண்புகளில் ஒன்று இருந்து மற்றொன்று இல்லாமலிருப்பது சரியாகாது.

ஒன்றுக்கொன்று அவசியமான, நிபந்தனையான பண்புகளாகும் இவை. மறைவானவற்றை நம்புதல், இறுதித் தூதர் கொண்டுவந்த உண்மைகளையும் முந்தைய தூதர்கள் சொன்ன உண்மைகளையும் நம்புதல், மறுமையை உறுதியோடு ஏற்றல் ஆகிய இந்த அம்சங்களில் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க இயலாது. இதைப் பின்வரும் வசனங்களில் ஒரு கட்டளையாகவே அல்லாஹ் வெளியிடுகிறான்:

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்னுடைய இந்தத் தூதருக்கு அருளியுள்ள வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்புங்கள். (4:136)

எங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தையும், உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தையும் நாங்கள் நம்புகிறோம்; மேலும், எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே என்று கூறுங்கள். (29:46)

அத்துடன் அனைத்து இறைநம்பிக்கையாளர்களின் நிலையும் இவ்வாறே இருக்கும் என்றும் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கிறான்:

(இறைத்)தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர். இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடையவானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். இறைத்தூதர்களில் யாரையும் நாங்கள் வேறுபடுத்தி வித்தியாசம் பாராட்டமாட்டோம் (என்றும் அவர்கள் கூறுகிறார்கள்). (2:285)