தஃப்சீர் இப்னு கஸீர்
பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)
2 : 3 அல்பகரா
3. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்.
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (பிறருக்குச்) செலவு செய்வார்கள்.
(இந்த வேதம் இறையச்சமுடையோருக்கு நேர்வழி காட்டுகிறது என முந்தைய வசனம் குறிப்பிட்டது. அந்த இறையச்சமுடையோரின் பண்புகள் குறித்து இந்த வசனம் விவரிக்கிறது.
இறையச்சமுடையோரின் மூன்று முக்கியமான பண்புகள் இங்கே இடம்பெற்றுள்ளன.
1. இறைவன், வானவர்கள், மறுமை போன்ற கண்ணுக்குத் தெரியாத மறைவான உண்மைகளை நம்புதல். இது, நம்பிக்கை சார்ந்த பண்பு.
2. தொழுகையை முறையோடு கடைப்பிடித்தல், இது, உடல் சார்ந்த வழிபாடு.
3. இறைவன் அருளிய செல்வங்களில் ஒரு பகுதியை அறவழியில் செலவழித்தல். இது, பொருள் சார்ந்த வழிபாடு. இத்தகைய பண்பாளர்கள்தான் இறையச்சமுடையோர் (முத்தகீன்) ஆவர்.)
இறைநம்பிக்கை (ஈமான்)
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘யுஃமினூன’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது ‘ஈமான்’ எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த வினைச் சொல்லாகும். ‘ஈமான்’ எனும் சொல்லுக்கு ‘உண்மையென நம்புதல்’ என்பது சொற்பொருளாகும். இந்தப் பொருளில்தான் பின்வரும் இறைவசனங்களில் ‘ஈமான்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது:
அவர் (நபி) அல்லாஹ்வை (உண்மையாளன் என்று) நம்புகிறார்; இறைநம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். (9:61)
இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்களுடைய சகோதரர்கள் தம் தந்தை யஅகூப் (அலை) அவர்களிடம், ‘‘நாங்கள் (எவ்வளவுதான்) உண்மையே சொன்னாலும் நீங்கள் எங்களை நம்பவேமாட்டீர்கள்’’ என்று சொன்னார்கள். (12:17)
இதைப் போன்றே, நற்செயல்களுடன் (அமல்) சேர்த்து ‘ஈமான்’ எனும் சொல் பயன்படுத்தப்படும்போது அதற்கு வெறும் ‘நம்பிக்கை’ என்றே பொருள். ‘‘நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத்தவிர’’ எனும் வசனத்தைப் போன்று.16
ஆனால், ‘ஈமான்’ எனும் சொல் (மற்ற எந்தச் சான்றுகளுடனும் இணையாமல்) பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் அது (இறைவனிடமிருந்து இறைத்தூதர் பெற்ற எல்லா உண்மைகளையும் மனதார) நம்பிக்கை கொண்டு, (அவற்றை நாவால்) மொழிந்து, (அதன்படி) செயலாற்றுதல் என்ற விரிவான பொருளைத் தரும்.
இதுவே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். இமாம் ஷாஃபிஈ, அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) ஆகியோர், ‘‘இது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டகருத்தாகும்’’ என்று அறிவித்துள்ளனர்.
இதன்படி, ‘ஈமான்’ என்பது (நம்பிக்கை கொள்வதோடு அதை நாவால்) மொழிவதை யும், (உறுப்புகளால்) செயல்படுத்துவதையும் குறிக்கும். ஆகவே, (இத்தகைய) ஈமானில் கூடுதல், குறைவு ஏற்படலாம். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பிற்கு நாம்(இப்னு கஸீர்) எழுதியுள்ள விரிவுரையின் தொடக்கத்தில் அவற்றைத் தனியாகக் குறிப் பிட்டுள்ளோம்.17
ஈமான் எனும் சொல்லுக்கு ‘அச்சம்’ என்றும் சிலர் பொருள் கூறுகிறார்கள். இதன்படி, ‘‘மறைவானவற்றை நம்புவார்கள்’’ எனும் தொடருக்கு ‘‘மறைவிலும் தம் இறைவனை அவர்கள் அஞ்சி நடப்பார்கள்’’ எனப் பொருள் விரியும்.
‘‘யார் மறைவிலும் தம் இறைவனை அஞ்சி நடக்கிறார்களோ அவர்களுக்குப் பாவமன்னிப்பும் மாபெரும் பிரதிபலனும் கிடைக்கும்’’ எனும் (67:12ஆம்) வசனம் இதற்கு எடுத்துக்காட்டாகும். தவிரவும், இறையச்சம் என்பது ஈமான் மற்றும் கல்வியறிவின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. ‘‘இறை அடியார்களில் இறையை அஞ்சி நடப்போர் யாரெனில், (அவனை) நன்கு அறிந்தவர்கள்தான்’’ எனும் (35:28ஆம்) வசனம் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.
மறைவானவை (ஃகைப்) என்றால் என்ன?
‘‘அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்’’ என இவ்வசனம் கூறுகிறது. ‘மறைவானவை’ (ஃகைப்) என்றால் என்ன என்பது குறித்து முன்னோர்கள் பல்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர்.
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள்18 கூறுகிறார்கள்: அல்லாஹ், வானவர்கள், இறைவேதங்கள், இறைத்தூதர்கள், சொர்க்கம், (இறப்புக்குப்பின்) இறைவனைத் தரிசித்தல், இறப்புக்குப்பிந்தைய வாழ்க்கை- இவை அனைத்தும் மறைவானவைதான்.
மனிதர்களின் புலன்களுக்கு அப்பாற்பட்ட சொர்க்கம், நரகம் உள்ளிட்ட குர்ஆன் கூறும் உண்மைகளே ‘மறைவானவை’ ஆகும் என இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகியோர் கூறியதாக சுத்தீ (ரஹ்) அவர்கள்19 அறிவிக்கிறார்கள்.
‘‘அல்லாஹ்வை நம்புவதே மறைவானதை நம்புவதுதான்’’ என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘மறைவானவை’ தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட இக்கருத்துகள் யாவும் கிட்டத்தட்ட ஒரே பொருள் கொண்டவைதான். இவை அனைத்தையும் இங்கு (வசனத்தில்) நோக்கமாகக் கொள்ளலாம்.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘‘அல்லதீன யுஃமினூன பில் ஃகைபி’’ என்ற வாக்கியத்திற்கு ‘‘மறைவான நிலையில் -பார்க்காதிருந்தும்கூட- இறைநம்பிக்கை கொள்பவர்கள்’’ என்றும் விளக்கம் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்தையொட்டியே பின்வரும் நபிமொழிகள் அமைந்திருப்பதைக் காணலாம்.)
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது முன்னர் வாழ்ந்த நபித்தோழர்கள் குறித்தும் அவர்களின் நற்செயல்கள் குறித்தும் (பாராட்டிப்) பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது ‘‘முஹம்மத் (ஸல்) அவர்களின் நிலை, அவர்களை (நேரடியாக)ப் பார்த்தவர்களுக்கு மிகத் தெளிவானதாகவே இருந்தது. (எனவே, நபி (ஸல்) அவர்களை நபித்தோழர்கள் நம்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.)
ஆனால், யாரைத் தவிர வேறுஇறைவனே இல்லையோ அவன்மீது சத்தியமாக! (பார்க்காமலேயே) மறைவான ஒன்றை நம்புவதைவிட மேலானதொரு நம்பிக்கையை எவரும் கொள்ள முடியாது’’ என்று கூறிய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்’’ என்று தொடங்கி, ‘‘அவர்களே வெற்றியாளர்கள்’’ என்பதுவரை (2:3-5 ஆகிய வசனங்களை) ஓதினார்கள்.20
இதே கருத்தில் மற்றொரு ஹதீஸும் வந்துள்ளது. அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஜுமுஆ ஹபீப் பின் சிபாஃ (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எங்களுக்கு அறிவியுங்கள்’’ என்று கேட்டேன். அதற்கு அபூஜுமுஆ (ரலி) அவர்கள், ‘‘சரி; நல்ல ஹதீஸ் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கிறேன்’’ என்று கூறிவிட்டுப் பின்வருமாறு அறிவித்தார்கள்:
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காலை உணவு அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது எங்களுடனிருந்த அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (தங்களுடைய அன்புத் தோழர்களான) எங்களைவிடச் சிறந்தவர்கள் வேறு யாரும் உண்டா? தங்களுடன் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்; தங்களுடன் சேர்ந்து அறப்போர் புரிந்தோம்?’’ என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம். (உங்களைவிடச் சிறந்தவர்கள் உள்ளனர்.) உங்களுக்குப் பின்னால் வரும் கூட்டத்தார்தான் அவர்கள். என்மீது நம்பிக்கை கொள்வார்கள்; ஆனால், என்னைப் பார்த்திருக்கமாட்டார்கள்’’ என்று பதிலளித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது: ஸாலிஹ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் தொழுவதற்காக நபித்தோழர் அபூஜுமுஆ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அன்று எங்களுடன் ரஜாஉ பின் ஹய்வா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அபூஜுமுஆ (ரலி) அவர்கள் (எங்களிடம் விடைபெற்றுத்) திரும்பியபோது அவர்களைப் பின்தொடர்ந்து நாங்களும் புறப்பட்டோம்.
அப்போது ’’நீங்கள் என்னை உபசரித்ததற்காக) உங்களுக்கு ஒரு பரிசு தர வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியுற்ற ஒரு ஹதீஸை உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்’’ என்று அபூஜுமுஆ (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! சொல்லுங்கள்’’ என்று நாங்கள் கூறினோம்.
அப்போது அபூஜுமுஆ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எங்களுடன் சொர்க்கவாசி என முன்னறிவிப்புச் செய்யப்பட்ட பதின்மரில் ஒருவரான முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களும் இருந்தார்கள். நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்கள்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்; தங்களைப் பின்பற்றிவருகிறோம்; எங்களைவிட மகத்தான நன்மை பெறுவோர் வேறு யாருமுள்ளனரா?’’ என்று கேட்டோம்.
அதற்கு நபி (ஸல்), ‘‘அல்லாஹ்வின் தூதர் உங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகிறார்; வானத்திலிருந்து உங்களுக்கு இறைச்செய்தி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் என்னை நம்புவதற்கு உங்களுக்கு என்ன தடை?
ஆனால், உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவர். அவர்களிடம் இரு அட்டைகளுக்கிடையிலான வேதம் (குர்ஆன்)தான் இருக்கும். அதை அவர்கள் நம்பி, அதில் உள்ளவாறு செயல்படுவார்கள். அவர்கள்தான் உங்களைவிடவும் மகத்தான நன்மைகளுக்குரியவர்கள்; அவர்கள்தான் உங்களைவிடவும் மகத்தான நன்மைகளுக்குரியவர்கள்’’ என்று எங்களுக்குப் பதிலளித்தார்கள்.22
தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்
(இறையச்சமுடையோரின் இரண்டாம் பண்பாக) ‘‘அவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்’’ என இவ்வசனம் கூறுகிறது. ‘கடைப்பிடிப்பார்கள்’ என்பதைக் குறிக்க ‘இகாமத்’ எனும் வேர்ச்சொல்லில் இருந்துபிறந்த ‘யுகீமூன’ எனும் வினைச்சொல் ஆளப்பட்டுள்ளது. தொழுகையைக் கடைப்பிடித்தல் (இகாமத்துஸ் ஸலாத்) என்றால், தொழுகையில் குனிதல் (ருகூஉ), சிரம்பணிதல் (சஜ்தா), குர்ஆன் ஓதுதல், மன ஓர்மை ஆகியவற்றை முழுமையாகச் செய்து, தொழுகையில் முழு ஈடுபாடு காட்டுவதாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
முறையோடு அங்கத் தூய்மை (உளூ) செய்து, குனிதல் மற்றும் சிரம்பணிதல் ஆகியவற்றைச் சரியாகப் பேணி உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதே ‘இகாமத்துஸ் ஸலாத்’ ஆகும் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அடுத்து ‘தொழுகை’ என்பதைக் குறிக்க ‘அஸ்ஸலாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அரபுகளின் வழக்கில் இச்சொல்லுக்குப் ‘பிரார்த்தனை’ (துஆ) என்று பொருள்படும். கவிஞர் அல்அஃஷா23 கூறுகிறார்:
அவளது வீட்டுக்கு
வாயிற்காப்போன் ஒருவன் உள்ளான்.
அவன் காலமெல்லாம்
அவளது வீட்டை விட்டு அகலமாட்டான்.
அவள் (அவனை)கொலையே செய்தாலும்
அவளுக்காக அவன் பிரார்த்திப்பான் (ஸல்லா);
இராகமும் இசைப்பான்.
எனக்காக - நீ பிரார்த்தித்தவை (ஸல்லைத்தி)
போன்று உனக்கும் உண்டு.
எனவே, நீ கண்மூடிச் சற்று உறங்கிக்கொள்.
ஏனெனில், மனிதனின் விலாவுக்குப்
படுக்கை மிக அவசியம்.24
இஸ்லாமிய வழக்கில் ‘அஸ்ஸலாத்’ எனும் சொல், தொழுகை எனும் வழிபாட்டைக் குறிக்கும். அதாவது குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் செய்முறைகளோடு நிறைவேற்றப்படும் குனிதல் (ருகூஉ), சிரம்பணிதல் (சஜ்தா) ஆகியவை அடங்கிய ஒரு வழிபாட்டு முறை ஆகும்.
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் இருந்து செலவு செய்வார்கள்.
(இறையச்சமுடையோரின் மூன்றாம் பண்பாக) ‘‘நாம் அவர்களுக்கு வழங்கிய (செல் வத்)திலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள்’’ என இவ்வசனம் தெரிவிக்கிறது. அதாவது தங்களது செல்வத்திற்குரிய ‘ஸகாத்’ எனும் கட்டாய தர்மத்தை வழங்குவார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், இவ்வசனம் ‘ஸகாத்’ கடமையாக் கப்படுவதற்கு முன்பே அருளப்பெற்றது என்பதால், ஒருவர் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்வதையே இது குறிக்கிறது என நபித்தோழர்கள் சிலர் கூறுகின்றனர்.
மனிதா! இந்தச் செல்வங்கள் உனக்கு இரவலாக வழங்கப்பெற்றவை; அமானிதமாக ஒப்படைக்கப்பெற்றவை. விரைவில் அவற்றை நீ இழந்துவிடக்கூடும். ஆகவே, இறைவன் உனக்கு வழங்கியுள்ள செல்வத்திலிருந்து ஒரு பகுதியைப் பிறருக்கு வழங்கு- என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
‘ஸகாத்’ மற்றும் குடும்பச் செலவுகள் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களுக்கும் இது பொருந்தும் என்ற கருத்தையே இப்னுஜரீர் (ரஹ்) அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் பெரும்பாலும் தொழுகையையும் கொடையையும் இணைத்தே குறிப்பிடுகின்றான். ஏனெனில், தொழுகை என்பது, அல்லாஹ்வுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமையும் வழிபாடும் ஆகும். தொழுகையில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல், அவனைப் போற்றிப் புகழ்தல், அவனைப் பெருமைப்படுத்தி அவனிடம் பணிந்து வேண்டுதல், அவனையே சார்ந்திருத்தல் ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளன.
கொடை என்பது (மனிதன் பிற மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும்;) மக்களைச் சென்றடையும் உதவியாகும். இந்த உதவியைப் பெறுவதற்கு உறவினர்கள், குடும்பத் தார், அடிமைகள், அயலார் ஆகியோர் தகுதி படைத்தவர்களாவர். ஆகவே, கட்டாயக் கடமையான ‘ஸகாத்’ மற்றும் இதரச் செலவுகள் அனைத்துமே இவ்வசனத்தில் அடங்கும்.