தஃப்சீர் இப்னு கஸீர்
பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)
1 : 4 அல்ஃபாத்திஹா
(இறைவன்முன் நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியும் அவனிடம் சமர்ப்பிக்கும் வேண்டுதலும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இவ்வசனம் காட்டுகிறது. அல்லாஹ்! உன்னை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்; வேறு யாரையும், எப்பொருளையும் வழிபடமாட்டோம். நீயே எங்கள் இறைவன் என்பதால் உன்னிடமே உதவி கோருகின்றோம். நீயே எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.)
‘உன்னையே வணங்குகின்றோம்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘நஉபுது’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது ‘இபாதத்’ (வணக்க வழிபாடு) எனும் சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். இச்சொல்லுக்குப் பணிவு, இணக்கம் என்பது சொற்பொருளாகும். இணக்கமான பாதைக்கு ‘தரீகுன் முஅப்பதுன்’ என்றும், பணிந்து நடக்கும் ஒட்டகத்திற்கு ‘பஈருன் முஅப்பதுன்’ என்றும் கூறுவர். முழுமையான அன்பு, பணிவு, அச்சம் ஆகியவற்றின் சங்கமமே மார்க்க வழக்கில் ‘இபாதத்’ எனப்படும்.
இங்கு ‘உன்னையே’ (இய்யாக்க) எனும் செயப்படுபொருள் (இரண்டாம் வேற்றுமை), வினைச்சொல்லுக்கு (நஉபுது) முன் கொண்டுவரப்பட்டிருப்பதுடன் ஒரே வசனத்தில் திரும்பவும் கூறப்பெற்றுள்ளது. செயப்படுபொருளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், அதில் அழுத்தம் காட்டுவதுமே இதனால் நோக்கமாகும். ஆகவே, உன்னைத்தான் வழிபடுவோம்; வேறு யாரையும் வழிபடமாட்டோம். உன்மீதே முழு நம்பிக்கை கொண்டுள்ளோம் என இவ்வசனத்தின் பொருள் விரியும். இதுதான் முழுமையான வழிபாடாகும்.
அல்லாஹ்வை மட்டுமே வழிபடுவது, அவனிடமே உதவி கோருவது ஆகிய இவ்விரு பொருட்களில் மார்க்கத்தின் அனைத்து அம்சங்களும் அடங்கிவிடுகின்றன. முந்தியது, உன்னை மட்டுமே வழிபடுவோம்; வேறு யாரையும் எதையும் வழிபடமாட்டோம் என்று கூறி இணைவைப்பிலிருந்து (ஷிர்க்) முற்றாக விலகி நிற்பதைப் பிரகடனப்படுத்துகிறது. இரண்டாவது, உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று கூறி, அல்லாஹ்வுக்குமுன் சரணடைந்து ‘‘எல்லாம் உன்னால்தான்; என்னால் ஒன்றுமில்லை’’ என்பதைக் காட்டுகிறது.
இதே கருத்து குர்ஆனில் பல வசனங்களில் காணக் கிடைக்கிறது. ‘‘அல்லாஹ்வையே வழிபடுவீராக. அவன்மீதே முழு நம்பிக்கை வைப்பீராக’’. (11:123)
‘‘(நபியே!) கூறுக: அவனே ரஹ்மான் (அளவிலா அருளாளன்) ஆவான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இன்னும் அவனையே நாங்கள் முழுமையாக சார்ந்துள்ளோம்.’’ (67:29)
அத்தியாயத்தின் தொடக்கத்தில் அல்லாஹ்வின் பண்புகளைக் கூறிப் படர்க்கையாக அவனைப் புகழ்ந்தபின் இங்கு, ‘‘உன்னையே வணங்குகின்றோம்; உன்னிடமே உதவி தேடுகின்றோம்’’ என முன்னிலைப்படுத்திப் பேசியிருப்பதைக் காண்கிறோம். கண்ணுக்கு மறைவாக உள்ள அல்லாஹ்வை, அவனுக்கே உரிய உயர்பண்புகளால் புகழ்ந்து பாராட்ட, அவன் பக்கம் நெருங்கி, அவன் முன்னால் நிற்பதைப் போன்றே உணர்வு ஏற்படுகிறது.
ஆகவேதான், உரையின் போக்கு படர்க்கையிலிருந்து முன்னிலைக்குத் திரும்பிற்று. இதன்மூலம், தொடக்கத்தில் இறைவன் தன் அழகிய பண்புகளால் தன்னைத் தானே புகழ்ந்து, இப்படித்தான் தன்னைப் புகழ வேண்டுமென அடியார்களுக்கு வழிகாட்டுகின்றான் எனலாம்.
வழிபடுவதை முதலிலும், உதவி தேடு வதை அடுத்தும் குறிப்பிட்டதன் மூலம், இறைவழிபாடே அடிப்படை நோக்கம் என்றும், உதவி தேடல் என்பது வழிபாட்டுக்கு வேண்டிய உபகரணம் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்படு கிறது. பிரதானமானதை முதலில் கூறி, அடுத்ததை அடுத்துக் கூறுவதே மரபாகும்.
ஐயமும் தெளிவும்
இங்கு ‘நாங்கள் வணங்குகின்றோம்’ என்றும், ‘நாங்கள் உதவி தேடுகின்றோம்’ என்றும் பன்மையில் கூறப்பெற்றுள்ளது. இந்த அத்தியாயத்தை ஓதித் தொழுகின்றவர் ஒருவராக இருக்கும்போது ‘பன்மை’ வடிவம் எவ்வாறு தகும்? மரியாதைக்காகவே ‘பன்மை’ ஆளப்பட்டுள்ளது என்றால், பிரார்த்திப்பவர் தம்மைத் தாமே கண்ணியப்படுத்திக்கொள்வது பிரார்த்தனைக்குப் பொருந்தாதே! இப்படி ஒரு வினா எழலாம்.
எந்தவொரு தொழுகையாளியும் மானுட இனத்தின் ஓர் அங்கமே. எனவே, இறையடியார்களின் இனம் சார்பாக அவர் பிரார்த்திப்பதால் பன்மை வடிவம் இங்கு ஆளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழும்போது, அல்லது இமாமாக இருக்கும் போது தம் சார்பாகவும் தம் சகோதர இறைநம் பிக்கையாளர்கள் சார்பாகவும் அவர் இறைவன் முன் பேசுகிறார். எந்த இறைவழிபாட்டிற்காகப் படைக்கப்பட்டார்களோ அந்த வழிபாட்டு உணர்வை மனிதர்கள் அனைவர் சார்பாகவும் அவர் வெளிப்படுத்துகிறார். இதன்மூலம் மற்ற வர்களும் நன்மை அடைய இவர் காரணமாகிறார்.
‘இய்யாக்க நஉபுது’ (உன்னையே வணங்குகின்றோம்) என்ற நிகழ்கால வினைச்சொல் இங்கு ஆளப்பட்டுள்ளது. இது, ‘இய்யாக்க அபத்னா’ (உன்னை நாங்கள் வணங்கிவிட்டோம்) என்ற இறந்தகால வினைச்சொல்லைவிடப் பணிவைக் காட்டுவதில் சிறந்து விளங்குகிறது. ஏனெனில், பிந்தியதில் ‘‘அல்லாஹ்வை வணங்க வேண்டிய முறையில் வணங்கி முடித்துவிட்டோம்’’ என்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக்கொள்கின்ற கருத்து இழையோடுகிறது. உண்மையில், அல்லாஹ்வை வழிபட வேண்டிய முறையில் வழிபடுவதற்கும், அவன் தகுதிக்கேற்ப அவனைப் போற்றுவதற்கும் யாருக்கும் சக்தி கிடையாது.
அடிபணிந்து வழிபடுதல் (இபாதத்) என்பது தான் அடியானுக்குச் சிறப்புச் சேர்க்கின்ற மகத்தான நிலையாகும். இதன்மூலமே இறைவனின் சமூகத்துடன் அவன் தொடர்புகொள்ள முடிகிறது என்பதே காரணமாகும்.
‘‘அவனுடைய அடிமை என்றே என்னை அழையுங்கள்; அதுவே என் பெயர்களில் சிறந்தது’’ என்றார் கவிஞர் ஒருவர். அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களை, அவர்களின் உயர்நிலையில் வைத்துக் குறிப்பிடும்போது ‘அப்து’ (அடிபணிந்து வணங்கி வாழும் அடியார்) என்றே குறிப்பிடுகின்றான்.
நபி (ஸல்) அவர்களுக்கு வேதத்தை அருளிச் சிறப்பித்ததைக் குறிப்பிடுகையில், ‘‘தன் அடியாருக்கு இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ (18:1) என்று இறைவன் கூறுகின்றான்.
‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் (முஹம்மத்) அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது அவரை நோக்கி அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்’’ (72:19) என்கிறது மற்றொரு வசனம்.
நபி (ஸல்) அவர்களை ஜெரூசலத்திலுள்ள அல்மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவோடு இரவாக அழைத்துச் சென்றது பற்றிக் குர்ஆன் கூறும்போது, ‘‘அல்மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து அல்மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குத் தன் அடியாரை இரவில் அழைத்துச்சென்ற அல்லாஹ் தூயவன்’’ (17:1) என்று குறிப்பிடுகிறது.