தஃப்சீர் இப்னு கஸீர்

பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)

விவாதம்

விவாதம்

மேற்கண்ட (5ஆம்) ஹதீஸிலிருந்து ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் தொடர்பான விளக்கங்கள் சில கிடைக்கின்றன.

இந்த ஹதீஸில், ‘‘தொழுகையை எனக்கும் என் அடியாருக்குமிடையே இரு பாதிகளாக நான் பங்கிட்டுவிட்டேன்’’ என அல்லாஹ் கூறினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ‘தொழுகை’ (ஸலாத்) என்பது, (தொழுகையில்) குர்ஆன் ஓதுவதையே குறிக்கிறது. ‘‘உமது தொழுகையில் அதிகமாகச் சப்தமிட்டும் ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். இவ்விரண்டுக்குமிடையே ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக’’ என அல்லாஹ் கூறுகின்றான் (17:110); இவ்வசனத்தில் ‘ஓதுதல்’ என்பதைக் குறிக்க ‘ஸலாத்’ (தொழுகை) எனும் சொல்லே ஆளப்பட்டுள்ளது.

இதைப் போன்றே ‘‘அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையையும் நிலைநிறுத்துவீராக!’’ எனும் வசனத்தில் (17:78), ‘தொழுகை’ என்பதைக் குறிக்க ‘ஓதுதல்’ (‘குர்ஆன்’) எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் மூலம், குர்ஆன் ஓதுவதற்குத் தொழுகையில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவமும், அது தொழுகையின் பிரதான விதிகளில் ஒன்று என்பதும் புலனாகிறது.

அடுத்து தொழுகையில் (குர்ஆன் வசனங்கள் ஓதுவது அவசியம் என்றானபின் அவ்வாறு) ஓதப்படுவது ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயமாகத்தான் இருக்க வேண்டுமா? அல்லது வேறு அத்தியாயமாகவும் இருக்கலாமா? என்பது தொடர்பாக அறிஞர்களிடையே இரு கருத்துகள் நிலவுகின்றன.

1. இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்க ளும் ஒத்த கருத்துள்ள அவர்களுடைய தோழர்களும் தொழுகையில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தைத்தான் ஓத வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும், குர்ஆனில் எதை ஓதினாலும் செல்லும் என்றும் கூறுகிறார்கள். ‘‘குர்ஆனில் உங்களுக்கு எது சுலபமானதோ அதை ஓதிக்கொள்ளுங்கள்’’ எனும் (73:20 ஆம்) வசனத் தொடரின் பொதுமைக் கருத்தை இவர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

மேலும், முறை தவறித் தொழுத ஒருவர் தொடர்பான ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள், ‘‘பின்னர் குர்ஆனில் உமக்கு எது சுலபமாகத் தெரியுமோ அதை ஓதிக்கொள்வீராக’’ என அவரிடம் கூறினார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.10 இங்கு சுலபமானதை ஓதிக்கொள்ளுமாறு அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்களே தவிர, குறிப்பாக ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று கூறவில்லை.

2. மற்ற இமாம்களான மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத் (ரஹ்) ஆகியோர், தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையே குறிப்பாக ஓத வேண்டும் என்றும், அதை ஓதாமல் தொழுகை நிறைவேறாது என்றும் கூறுகின்றனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட (ஐந்தாவது) ஹதீஸில், ‘‘அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதப்படாத தொழுகை குறைபாடுள்ளது; முழுமை பெறாதது’’ என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அத்துடன், ‘‘அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் தவறியவருக்குத் தொழுகையே கிடையாது’’ என்ற ஹதீஸையும்,11 ‘‘உம்முல் குர்ஆன் (அல்ஃபாத்திஹா) ஓதப்படாத தொழுகை செல்லாது’’ என்ற ஹதீஸையும்12 இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இது தொடர்பாக இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன.

அடுத்து இமாமைப் பின்பற்றித் தொழுகின்றவர் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதுவது கட்டாயமா? என்பது தொடர்பாக அறிஞர்களிடையே மூன்று விதமான கருத்துகள் நிலவுகின்றன.

1. இமாமைப் போன்றே, இமாமைப் பின்தொடர்ந்து தொழுகின்றவரும் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுவது கட்டாயமாகும். முன்வந்த ஹதீஸ்கள் (இமாம், பின்தொடர்பவர்) இருவருக்கும் பொதுவானவை என்பதே காரணமாகும்.

2. எல்லாத் தொழுகைகளிலும் -சப்தமிட்டு ஓதப்படும் தொழுகை, சப்தமின்றி ஓதப்படும் தொழுகை எதுவாயினும்- இமாமைப் பின்தொடர்ந்து தொழுகின்றவர் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓத வேண்டியதில்லை. ‘‘யார் இமாமைப் பின்தொடர்ந்து தொழுகின்றாரோ, அவருக்கு இமாமின் ஓதலே அவரது ஓதலாகும்’’ என்ற ஹதீஸ்13 இக்கருத்தாளர்களுக்கு ஆதாரமாகும்.

3. சப்தமின்றி மெதுவாக ஓதப்படும் தொழுகைகளில் இமாமைப் பின்தொடர்ந்து தொழுகின்றவரும் ஓத வேண்டும்; சப்தமிட்டு ஓதப்படும் தொழுகைகளில் ஓத வேண்டிய தில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் ஏற்படுத்தப்பட்டதே பின்பற்றப்படுவதற் காகத்தான். ஆகவே, இமாம் (அல்லாஹு அக்பர் என்று கூறி) ‘தக்பீர்’ சொன்னால் நீங்களும் ‘தக்பீர்’ சொல்லுங்கள். அவர் (சப்தமிட்டு குர்ஆன் வசனங்களை) ஓதினால் நீங்கள் மௌனமாக இருந்து கேளுங்கள்.14

குர்ஆனிலுள்ள மற்ற எந்த அத்தியாயத் திற்கும் இல்லாத சில விதிமுறைகள் அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்கு இருப்பதாலேயே இந்த விளக்கங்களை இங்கே குறிப்பிட நேரிட்டது.

‘அஊது பில்லாஹ்’ குறித்த விளக்கம்

(குர்ஆனை ஓதுவதற்குமுன் ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூற வேண்டும். ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருவது தொடர்பாக வந்துள்ள வசனங்கள்:)

1. (நபியே!) ஷைத்தானின் தாக்கம் ஏதேனும் உமக்கு ஏற்பட்டால் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியேற்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். (7:200)

2. (நபியே!) கூறுக: என் இறைவா! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! ஷைத்தான்கள் என்னை அண்டாமல் இருப்பதற்கும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (23:97,98)

3. (நபியே!) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதேனும் ஊசலாட்டம் ஏற்படுமாயின், உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியேற்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். (41:36)

இந்தக் கருத்தில் அமைந்த வசனங்கள் இந்த மூன்று மட்டுமே குர்ஆனில் உள்ளன. மனிதர்களில் உள்ள பகைவர்களிடம் நளினமாக நடந்துகொள்ளுமாறும் அவர்களுக்கு நன்மை புரியுமாறும் இறைவன் கட்டளையிடுகின்றான். அவ்வாறு நடந்துகொள்வதால் பகைவனும் நண்பனாக, உற்ற தோழனாக மாறக்கூடும்.

ஆனால், ஷைத்தான் எனும் பகைவனின் தீங்கிலிருந்து தன்னிடம் பாதுகாப்புக் கோரும்படி இறைவன் கட்டளையிடுகின்றான். ஏனெனில், நளினமாக நடந்துகொள்வதற்கோ நன்மை புரிவதற்கோ ஷைத்தான் ஏற்றவன் அல்லன். மனித இனத்தின் அழிவு ஒன்றை மட்டுமே இலட்சியமாகக் கொண்டவன் ஷைத்தான். ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கும் ஷைத்தானுக்குமிடையே தோன்றிய பகைமை அவ்வளவு கடுமையானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவன் ஆவான். ஆகவே, நீங்களும் அவனைப் பகைவனாகவே கருதுங்கள். (35:6)

மேலும், அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான்: என்னை விடுத்து ஷைத்தானையும் அவனுடைய சந்ததிகளையுமா நீங்கள் நண்பர்களாக (காவலர்களாக)க் கருதுகிறீர்கள்? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாவர். (18:50)

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து (‘உங்களுக்கு நான் நற்போதனை செய்பவன் ஆவேன்’ என்று) பொய்ச் சத்தியம் செய்த ஷைத்தான் நம்முடன் எப்படி நடந்துகொள்வான் என எதிர்பார்க்கிறீர்கள்? அது மட்டுமா? ‘‘உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! நான் இவர்கள் அனைவரையும் வழிகெடுத்தே தீருவேன்’’ என இறைவனிடம் சத்தியம் செய்தவனாயிற்றே அவன்! (38:82)

ஆகவேதான், ‘‘(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’’ (16:98) என குர்ஆன் கட்டளையிடுகிறது.

சிலர், இந்த வசனத்தின் வெளிப்படையான பொருளைக் கருத்தில் கொண்டு, ‘‘குர்ஆன் ஓதி முடித்தபின் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோர வேண்டும்’’15 என்கின்றனர். ஆனால் பெரும்பாலோரின் கருத்து, குர்ஆன் ஓதுவதற்கு முன்பே பாதுகாப்புக் கோர வேண்டும். அப்போதுதான் ஓதும்போது ஷைத்தானின் ஊசலாட்டத்தைத் தவிர்க்கலாம்.

இதன்படி மேற்கண்ட (16:98ஆம்) வசனத்தின் பொருள், ‘‘நீர் குர்ஆனை ஓத விரும்பினால்...’’ என்றே அமையும். ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தொழுகையில் நின்றால் உங்கள் முகங்களைக் கழுவிக் கொள்ளுங்கள்’’ எனும் அங்கத் தூய்மை (உளூ) தொடர்பான (5:6ஆம்) வசனத்திற்கு ‘‘நீங்கள் தொழுகையில் நிற்க விரும்பினால்’’ என்றே பொருள் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

இக்கருத்துக்குஆதாரமாக ஒரு ஹதீஸைக் கூறலாம். நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் நின்றால் முதலில் ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். பிறகு (இறைவனைப் புகழும்) ‘ஸனா’ உரைப்பார்கள். பின்னர் (குர்ஆன் ஓதுவதற்கு முன்பாக), ‘‘அஊது பில்லாஹிஸ் ஸமீஇல் அலீம் மினஷ் ஷைத்தானிர் ரஜீம். மின் ஹம்ஸிஹி, வ நஃப்கிஹி, வ நஃப்ஸிஹி’’ என்று கூறுவார்கள்.

(பொருள்: நன்கு செவியேற்பவனும் நன்கு அறிகின்றவனுமான அல்லாஹ்விடம் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். ஷைத்தானின் ஊசலாட்டம், அவனது ஊதல், துப்பல் ஆகியவற்றிலிருந்து (பாதுகாப்புக் கோருகிறேன்).16

பொருள்

‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்பதன் பொருளாவது: சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன். அதாவது என் மார்க்க விஷயங்களிலோ, இம்மை விஷயங்களிலோ ஷைத்தான் எனக்கு இடரளிப்பதிலிருந்து அல்லாஹ்வின் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன். அல்லது எனக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றவிடாமல் என்னை அவன் தடுப்பதிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். ஏனெனில், ஷைத்தானின் தீங்கிலிருந்து மனிதனைக் காக்கும் சக்தி அல்லாஹ் ஒருவ னுக்கே உண்டு.

பாதுகாப்புக் கோருதல் (இஸ்த்திஆதா) என்றால், எல்லாத் தீங்கில் இருந்தும் அல்லாஹ்விடம் அபயம் தேடுவதாகும். (அரபி மொழியில்) ‘இயாதத்’ (அஊது) என்பது அச்சம் களைவதையும், ‘லியாத்’ என்பது ஆசையை அடைவதையும் குறிக்கும்.

இந்தச் சொல்லாக்கம் முதனப்பீ17 எனும் (பிரபல அரபுக்) கவிஞனின் (பின்வரும்) கவிதையில் காணப்படுகிறது:

இறைவா!

என் ஆசை (லியாத்) அடைய

நான் உன்னை வேண்டுகிறேன்

என் அச்சம் (இயாதத்) களைய

நான் உன்னிடம் வேண்டுகிறேன்

நீ உடைத்த எலும்பை

ஒட்டுபவர் யாருமில்லை

நீ இணைத்த எலும்பை

உடைப்பவரும் யாருமில்லை.

ஷைத்தான்

அரபி மொழியில் ‘ஷைத்தான்’ எனும் சொல் ‘ஷ(த்)தன’ எனும் சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். இதற்குத் ‘தொலைவில் உள்ளான்’ என்று பொருள். ஷைத்தான் செய்த பாவங்களின் காரணத்தால் எல்லா நன்மைகளும் அவனது கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதால் அவனுக்கு இப்பெயர் வரலாயிற்று.

‘ஷைத்தான்’ எனும் சொல் ‘ஷா(த்)த’ (கரிந்து போனான்) எனும் சொல்லில் இருந்து பிறந்ததாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஷைத்தான் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது. இருப்பினும், முதலாவது கருத்தே சரியானதாகும்.18

அரபி மொழி வல்லுநர் சீபவைஹி19 கூறுகிறார்: ஒருவன் ஷைத்தான்களின் செயல்களில் ஒன்றைச் செய்துவிட்டான் என்பதைக் குறிக்க அரபுகள் ‘‘தஷை(த்)தன ஃபுலானுன்’’ என்றே குறிப்பிடுவர். ‘ஷைத்தான்’ எனும் சொல் ‘ஷா(த்)த’ என்பதிலிருந்துவந்திருப்பின் ‘தஷய்ய(த்)த ஃபுலானுன்’ என்று கூறியிருப்பர். ஆகவே, ‘ஷைத்தான்’ என்பது ‘தொலைவு’ எனும் பொருள் கொண்ட ‘ஷ(த்)தன்’ எனும் சொல்லில் இருந்து பிறந்ததாகும் என்பதே சரியான கூற்றாகும்.

இதனாலேயே ஜின், மனிதன் மற்றும் உயிரினங்களில் முரண்டு பிடிக்கும் ஒவ்வொன்றுக்கும் ‘ஷைத்தான்’ என்றே கூறுகின்றனர். இவ்வாறு பிடிவாதம் செய்கின்றவற்றிலிருந்து விலகி தூரமாக இருக்கவே மக்கள் விரும்புவர் என்பதே காரணமாகும். ‘‘மனித மற்றும் ஜின் இனத்தின் ஷைத்தான்கள்’’ (6:112) என இறைவன் குறிப் பிட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் துருக்கி நாட்டுக் குதிரை ஒன்றின் மீது பயணம் செய்தார்கள். குதிரை மிடுக்கோடு நடந்தது. அதை உமர் (ரலி) அவர்கள் அடிக்க, அதன் மிடுக்குத் தனம் மேலும் அதிகமாயிற்று. உடனே குதிரையிலிருந்து இறங்கிய உமர் (ரலி) அவர்கள் ‘‘என்னை ஒரு ஷைத்தான்மீதுதான் உட்கார வைத்துவிட்டீர்கள். என்னை நானே மறக்கின்ற (எனக்கே பெருமை ஏற்படுகின்ற) நிலை ஏற்பட்டதாலேயே நான் இறங்கிவிட்டேன்’’ என்று கூறினார்கள்.20

அர்ரஜீம்

‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்பதிலுள்ள ‘அர்ரஜீம்’ எனும் சொல் ‘ஃபஈல்’ எனும் வாய்பாட்டில் அமைந்த செயப்பாட்டு வினையின் பெயராகும். இதற்கு ‘எல்லா நன்மைகளிலிருந்தும் விரட்டப்பட்டவன்’ என்று பொருள்.

அல்லாஹ் கூறுகின்றான்: திண்ணமாக நாமே (பூமிக்கு) அருகிலுள்ள வானத்தை (விண்மீன்) விளக்குகளால் அலங்கரித்தோம். மேலும், ஷைத்தான்களை விரட்டுகின்றவையாகவும் அவற்றை நாம் ஆக்கினோம். (67:5)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் வானங்களை நாம் பாதுகாத்தோம். திருட்டுத்தனமாக (வானவர்களின் உரையாடலை) ஒட்டுக்கேட்கும் ஷைத்தானைத் தவிர. அந்த ஷைத்தானையும் சுடர் வீசும் தீச்சுவாலை பின்தொடர்ந்து விரட்டும். (15:17,18)

இந்த வசனங்களில் ‘ரஜீம்’ எனும் சொல், ‘விரட்டப்பட்டது’ எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.