தஃப்சீர் இப்னு கஸீர்
பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)
‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தின் விரிவுரை
‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தின் விரிவுரை
பிஸ்மில்லாஹ்வின் விளக்கம்
(குர்ஆனில் ஒவ்வோர் அத்தியாயத்தின் தொடக்கத்திலும் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ எனும் ‘பஸ்மலா’ இடம்பெற்றுள்ளதைக் காணலாம். இதன் பொருள்: அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதா வது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு (27:30ஆம் வசனத்திலுள்ள) ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ அருளப்பெறும்வரை அத்தியாயங்களுக்கிடையே பிரிக்கும் முறையை அறியாதவர்களாக இருந்தார்கள்.21
நபித்தோழர்கள் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டே இறைவேதத்தைத் தொடங்கி வந்தார்கள். இதனாலேயே ஒவ்வொரு (நல்ல) சொல் மற்றும் செயலின் தொடக்கத்தில் பிஸ்மில்லாஹ் கூறுவது விரும்பத் தக்கதாகக் கருதப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறி ஆரம்பிக்கப்பெறாத எந்தச் செயலும் இறையருளிலிருந்து விலகியதாகும்.22
ஆகவே, அங்கத் தூய்மை (உளூ) செய்ய ஆரம்பிக்கும்போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது விரும்பத் தக்கதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பிக்காதவருக்கு உளூ(வின் பலன்) கிடையாது.23
மேலும், உண்ணப்படும் பிராணிகளை அறுக்கும்போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது விரும்பத் தக்கது (முஸ்த்தஹப்பு) என இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும், கட்டாயம் (வாஜிப்) என மற்றவர்களும் கூறுகின்றனர். சாப்பிடத் தொடங்கும்போது பிஸ்மில்லாஹ் கூறுவதும் விரும்பத் தக்கதாகும். ‘‘பிஸ்மில்லாஹ் கூறி, வலக் கரத்தால் சாப்பிடுக; உம(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடுக’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.24
இதைப் போன்றே தாம்பத்திய உறவு கொள்ளும்போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவதும் விரும்பத் தக்கதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால்... இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக. எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக.) என்று பிரார்த்தித்து, அந்த உறவினால் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக் குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.25
பிஸ்மில்லாஹ்
(‘பிஸ்மில்லாஹ்’ என்பதற்கு ‘அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்று பொருள். அல்லாஹ்வின் திருப்பெயரால் என்ன நடந்தது என்பதற்கு மூலத்தில் குறிப்பில்லை. ஆகவே, ஏதேனும் ஒன்றைக் கூறி வாக்கியத்தை நிறைவு செய்ய வேண்டும்.)
அல்லாஹ்வின் திருப்பெயரால் ‘என்ஆரம்பம்’ என்று பெயர்ச் சொல்லை ஏற்படுத்தி வாக்கியத்தை நிறைவு செய்யலாம். அல்லது அல்லாஹ்வின் திருப்பெயரால் ‘ஆரம்பிக்கிறேன்’; அல்லது ‘ஆரம்பித்தேன்’ என்று வினைச் சொல்லாலும் வாக்கியத்திற்கு முற்றுப் புள்ளியிடலாம். இரண்டும் சரியே.
ஏனெனில், வினைச்சொல் ஒன்று இருந் தால் அதற்கு வேர்ச்சொல் (பெயர்ச்சொல்) ஒன்று இருந்தே ஆக வேண்டும். ஆக, எந்தத் தொடக்கமும் சுபிட்சத்தோடும் நல்லபடி நிறைவடைய வேண்டும் என்ற வேண்டுத லோடும் அமைய வேண்டுமானால், தொடக்கத்தில் அல்லாஹ்வின் பெயர் கூற வேண்டும் என மார்க்கம் வழிகாட்டுகிறது.
பெயர்ச்சொல்லால் வாக்கியத்தை முடிக்கலாம் என்பதற்கு, ‘‘அல்லாஹ்வின் பெயராலேயே இக்கப்பல் ஓடுவதும் நிற்பதும் (அமைகின்றன)’’ (11:41) எனும் வசனம் சான்றாகும்.
வினைச்சொல்லால்வாக்கியத்தை முடிக்கலாம் என்பதற்கு, ‘‘(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுவீராக’’ (96:1) எனும் வசனம் சான்றாகும்.
அல்லாஹ்
(‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்’ என்பதிலுள்ள) ‘அல்லாஹ்’ எனும் சொல், அகில உலகத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்குரிய இடுகுறிப் பெயராகும்.26 இதுவே அவனுக்குரிய ‘அல்இஸ்முல் அஃளம்’ (மகத்துவம் பொருந்திய திருநாமம்)27 என்றும் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வுக்குரிய (அர்ரஹ்மான், அர்ரஹீம் போன்ற) எல்லாப் பண்புப் பெயர்களும் ‘அல்லாஹ்’ எனும் பெயருக்கு அடைமொழிகளாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து ‘அல்லாஹ்’ என்பது இடுகுறிப் பெயர்தான் என அறிய முடிகிறது.
அல்லாஹ் கூறுகின்றான்: அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிகின்றவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். (59:22)
இவ்வசனத்தொடர்களில் வரும் பண்புப் பெயர்கள் அனைத்தும் ‘அல்லாஹ்’ எனும் இடுகுறிப் பெயருக்கு அடைமொழிகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘‘அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றால் அவனை அழையுங்கள்’’ (7:180) என்றும், ‘‘நீங்கள் (அவனை) அல்லாஹ் என அழையுங்கள்; அல்லது ‘அர்ரஹ்மான்’ என அழையுங்கள். எப்பெயரால் அவனை நீங்கள் அழைத்தாலும் அவனுக்குப் பல அழகிய திருநாமங்கள் உள்ளன என்று (நபியே!) கூறுக’’ (17:110) என்றும் குர்ஆன் தெரிவிக்கின்றது.
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது -நூற்றுக்கு ஒன்று குறைவான- பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார்.28
‘அல்லாஹ்’ எனும் பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் சூட்டப்பட்டதில்லை. இதனாலேயே அரபி மொழியில் இச்சொல்லுக்குத் திரிபு வேறுபாடு (ஸர்ஃப்) காணப்படவில்லை. ஆகவே, இது ‘சொல் உரு மாறுபடாத’29 (கைரு முஷ்தக்) பெயர்ச்சொல்லாகும் என ஷாஃபிஈ, ஃகஸ்ஸாலீ, இமாமுல் ஹரமைன் (ரஹ்) உள்ளிட்ட அறிஞர்கள் கருதுவதாக குர்ஆன் விரிவுரையாளர் குர்துபீ30 (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். (ஆக, அல்லாஹ் எனும் சொல்லை மொழிபெயர்க்க இயலாது என்பது இவர்களின் வாதமாகும்.)
‘அல்லாஹ்’ எனும் சொல்லுக்குத் திரிபு வேறுபாடு உண்டு எனக் கூறுவோரும் உள்ளனர். (இதன்படி அதை மொழிபெயர்க்கலாம்.) அலஹ, யஃலஹு, இலாஹத் எனும் சொல் வடிவ அமைப்பிலிருந்து ‘அல்லாஹ்’ எனும் சொல் வந்தது என்பர் சிலர். (இதன்படி ‘அல்லாஹ்’ எனும் சொல்லுக்கு ‘வணங்கப்படுபவன்’ என்று பொருள்.) இதற்குச் சான்றாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (7:127ஆம்வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஆலிஹத்தக்க’ எனும் சொல்லை) ‘இலாஹத்தக்க’ என ஓதியிருப்பதைக் கூறுவர். இதற்கு ‘உன்னை வழிபடுவதை’ என்று பொருள்.
‘வலஹ’ (திகைத்தான்) எனும் சொல்லில் இருந்து ‘அல்லாஹ்’ எனும் சொல் பிறந்தது என்பர் வேறுசிலர். அல்லாஹ்வைப் பற்றிச் சிந்திக்கும்போது, அவனுடைய தனித்தன்மைக ளின் உண்மைகளை அறிவதில் திகைப்பே மிஞ்சுகிறது என்பதை இச்சொல் உணர்த்துகிறது.
அல்லாஹ்வை நினைவுகூர்வதால் மட்டுமே அறிவு அமைதி அடைகிறது; ஆன்மா மகிழ்ச்சி அடைகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ‘அலிஹ்த்து இலைஹி’ (அவனால் அமைதி கண்டேன்) எனும் வாக்கியத்திலிருந்து ‘அல்லாஹ்’ எனும் சொல் வந்தது என்றும் கூறப்படுகிறது. ‘‘அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன’’ (13:28) என்று குர்ஆன் கூறும்.
‘அல்லாஹ்’ எனும் சொல், உருமாறுபடாத (மொழிபெயர்க்க இயலாத) இடுகுறிப் பெயர் என்பதே இமாம் ராஸீ (ரஹ்)31 அவர்களின் முடிவாகும். இதுதான் கலீல்,32 சீபவைஹீ (ரஹ்) உள்ளிட்ட மொழியியல் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் கருத்துமாகும்.
அர்ரஹ்மான், அர்ரஹீம்
‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்’ எனும் வாக்கியத்திலுள்ள ‘அர்ரஹ்மான்’ மற்றும் ‘அர்ரஹீம்’ ஆகிய இரு சொற்களும் ‘அர்ரஹ்மத்’ (கருணை) எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மிகைப் பெயர்ச்சொற்களாகும். ‘அதிகமாகக் கருணை புரிகின்றவன்’ என்பதே இவ்விரு சொற்களின் பொருளாகும். எனினும், ‘அர்ரஹீம்’ என்பதைவிட ‘அர்ரஹ்மான்’ என்பது இன்னும் கூடுதலான மிகையைக் காட்டும்.
‘அர்ரஹ்மான்’ என்பது சொல் உரு மாறு படாத வார்த்தை எனச் சிலர் கருதினாலும், ‘அர்ரஹ்மத்’ எனும் வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததுதான் அது என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் குத்ஸீ ஆதாரமாகும் என்கிறார் விரிவுரையாளர் குர்துபீ (ரஹ்) அவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: நான் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) ஆவேன். நானே ‘ரஹிம்’ எனும் இரத்த உறவைப் படைத்து அதற்கு (ரஹ்மான் எனும்) என் பெயரிலிருந்தே ஒரு பெயரை (‘ரஹிம்’ என்பதை)த் தேர்ந்தெடுத்தேன். ஆகவே, யார் இரத்த உறவைப் பேணி வாழ்கிறாரோ அவருடன் நானும் உறவாடுவேன். யார் இரத்த உறவை முறிக்கிறாரோ அவருடன் நானும் உறவை முறித்துக்கொள்வேன்.33
விரிவுரையாளர் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அர்ரஹ்மான் எனும் சொல் ‘அர்ரஹ்மத்’ எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததுதான் என்பதற்கு இது தெளிவான சான்றாகும். பிடிவாதமாக இதை மறுப்பதில் அர்த்தமில்லை. அறியாமைக் கால அரபுகள் ‘அர்ரஹ்மான்’ எனும் பெயரை அந்நியமாகக் கருதினார்கள் என்றால், அல்லாஹ்வின் பண்புப் பெயர்களை அவர்கள் அறியாமலிருந்ததே அதற்குக் காரணமாகும்.
‘அர்ரஹ்மான்’ எனும் சொல் ‘ஃபஅலான்’ எனும் வாய்பாட்டிலும், ‘அர்ரஹீம்’ எனும் சொல் ‘ஃபஈல்’ எனும் வாய்பாட்டிலும் அமைந்தவை ஆகும். ‘ஃபஅலான்’ எனும் வாய்பாட்டில் அமைந்த சொற்கள் வினை மிகுதியைக் காட்டவே செய்யும். ‘ஃகள்பான்’ என்பதற்குக் ‘கடும் கோபமுள்ளவன்’ என்று பொருள். ஆனால், ‘ஃபஈல்’ எனும் வாய்பாடு மிகையைக் குறிப்பதைப் போன்றே, சில சமயங்களில் வினையாலணையும் பெயராகவும்,34 செயப்பாட்டு எச்ச வினையாகவும்35 ஆளப்படுவதுண்டு. அப்போது மிகையைச் சுட்டாது.
திருக்குர்ஆன் விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அர்ரஹ்மான்’ எனும் சொல்லுக்கு ‘அனைத்துப் படைப்புகளிடமும் கருணை காட்டுபவன்’ என்றும், ‘அர்ரஹீம்’ எனும் சொல்லுக்கு ‘இறைநம்பிக்கையாளர்கள் மீது கருணை காட்டுபவன்’ என்றும் பொருள் கூறப்படும். இந்த அடிப்படையிலேயே தனது ஆட்சியதிகாரத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘‘ரஹ்மான் அரியாசனத்தின் மீது தன் ஆட்சியை நிலைநாட்டினான்’’ (20:5) என்று அல்லாஹ் கூறுகிறான்.
இங்கு தன்ஆட்சியதிகாரம் எனும் அருள் அனைத்துப் படைப்புகளுக்கும் பொதுவானது என்பதை உணர்த்தும் முகமாக ‘அர்ரஹ்மான்’ எனும் சொல்லை இறைவன் ஆண்டுள்ளான்.
மற்றொரு வசனத்தில் ‘‘இறைநம்பிக்கையாளர்கள்மீது அவன் மிகவும் கருணை கொண்டவன் ஆவான்’’ (33:43) எனத் தன்னை பற்றி இறைவன் குறிப்பிடுகின்றான். இங்கு ‘அர்ரஹீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
இதிலிருந்து ‘அர்ரஹ்மான்’ என்பது ‘இம்மை, மறுமை ஆகிய ஈருலகிலும் அனைவருக்கும் பொதுவாகக் கருணை காட்டுபவன்’ என்ற பொருளையும், ‘அர்ரஹீம்’ என்பது ‘நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் கருணை காட்டுபவன்’ என்ற பொருளையும் பொதிந்துள்ளன என்று தெரிகிறது.
அல்லாஹ்வுக்குரிய பெயர்களில் ‘அர்ரஹ்மான்’ எனும் பெயரும் (அல்லாஹ் எனும் பெயரைப் போன்றே) அவனுக்கு மட்டுமே உரியதாகும். வேறு யாருக்கும் அப்பெயர் சூட்டப்படலாகாது. ‘‘நீங்கள் (அவனை) அல்லாஹ் என அழையுங்கள்; அல்லது ‘அர்ரஹ்மான்’ என அழையுங்கள்’’ (17:110) என்ற வசனமும், ‘‘அர்ரஹ்மானை அன்றி வணங்கப்படுவதற்கு வேறு தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா? என அவர்களிடம் கேட்பீராக’’ (43:45) என்ற வசனமும் இதை உறுதிப்படுத்துகின்றன.
யமாமா பகுதியைச் சேர்ந்த மகாபொய்யன் முசைலிமா என்பான் துணிந்து தன்னை நபி என்று சொல்லிக் கொண்டு, ‘யமாமா’வின் ரஹ்மான் எனத் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டபோது, அல்லாஹ் அவனுக்குப் மகாபொய்யன் (கத்தாப்) என்று பெயர்சூட்டி அம்பலப்படுத்தினான். ஆகவே, ‘மகாபொய்யன் முசைலிமா’ என்றே அழைக்கப்படலானான்; நாடு நகரமெங்கும் பொய்க்கு எடுத்துக்காட்டாக மாறினான்.
சிலர் ‘அர்ரஹீம்’ எனும் சொல்லே ‘அர்ரஹ்மான்’ எனும் சொல்லைவிட அதிகமான மிகையைக் குறிக்கிறது எனக் கருதுகின்றனர். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ எனும் வாக்கியத்தில், முதலில் இடம்பெற்றுள்ள ‘அர்ரஹ்மான்’ எனும் பதத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அதற்கடுத்ததாக ‘அர்ரஹீம்’ எனும் பதம் இடம்பெற்றுள்ளது. உறுதிப்படுத்துகின்ற சொல்லே (அர்ரஹீம்), உறுதிப்படுத்தப்படும் முந்தைய சொல்லை (அர்ரஹ்மான்) விடப் பலமிக்கதாக இருக்கும் என்பது இவர்களின் வாதம். ஆனால், இதுசரியன்று.
ஏனெனில், ‘பிஸ்மில்லாஹ்’வில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ள இவ்விரு சொற்களும் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துகின்ற இனத்தின் பாற்பட்டவை அல்ல; மாறாக, முன்னால் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்’ என்பதன் பண்புகளை விவரிக்கும் அடைமொழி இனத்தைச் சேர்ந்தவையாகும்.
ஐயமும் தெளிவும்
‘அர்ரஹ்மான்’ எனும் சொல்லே அதிக மிகை கொண்டது என்றிருப்பின், ‘அர்ரஹீம்’ என்பதைப் பின்னால் சேர்க்க வேண்டியதில்லையே! என்றொரு வினா எழலாம். இதன் பதில்: சில வேளைகளில் அல்லாஹ் அல்லாதவர்களும் தமக்கு ‘அர்ரஹ்மான்’ எனப் பெயர் சூட்டிக் கொண்டதுண்டு.
இந்நிலையில், ‘அர்ரஹீம்’ எனும் பெயரையும் சேர்க்கும்போது அல்லாஹ் அல்லாத வேறு யாரைப் பற்றிய எண்ணமும் தோன்றாது. ஏனெனில், ‘அர்ரஹ்மானிர் ரஹீம்’ என அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் எப்போதும் பெயர் சூட்டப்பட்டதில்லை. இதை அதாஉ (ரஹ்) அவர்கள் தெரிவிப்பதாக விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஆக, அல்லாஹ்வின் பெயர்களில் ‘அல்லாஹ்’ (இறைவன்), ‘அர்ரஹ்மான்’ (அளவிலா அருளாளன்) ‘அல்காலிக்’ (படைப்பாளன்), ‘அர்ராஸிக்’ (வாழ்வாதாரம் அளிப்பவன்) போன்றவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் சூட்டப்படா. ‘அர்ரஊஃப்’ (பரிவு மிக்கவன்), ‘அர்ரஹீம்’ (கருணையாளன்) போன்ற பெயர்கள் மற்றவர்களுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு.
நபி (ஸல்) அவர்கள் குறித்து அல்லாஹ் கூறும்போது, ‘‘இறைநம்பிக்கையாளர்கள்மீது அவர் அதிகப் பரிவும் (ரஊஃப்) கருணையும் (ரஹீம்) கொண்டவர்’’ (9:128) என்று குறிப்பிடுகின்றான். இதைப் போன்றே, பொதுவாக மனிதனைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘நாம் அவனைச் செவியுறுபவனாகவும் (சமீஉ), பார்ப்பவனாகவும் (பஸீர்) ஆக்கினோம்’’ (76:2) என்று கூறுகின்றான்.36