தஃப்சீர் இப்னு கஸீர்

பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)

1 : 2 அல்ஃபாத்திஹா

(அல்லாஹ்வின் பண்புப் பெயர்களான அர்ரஹ்மான் (அளவிலா அருளாளன்), அர்ரஹீம் (நிகரிலா அன்புடையோன்) ஆகிய இவ்விரு சொற்களுக்கான விளக்கம் முன்பே கூறப்பெற்றுள்ளது.)

விரிவுரையாளர் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ் தன்னைப் பற்றி ‘ரப்புல் ஆலமீன்’ (அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் அதிபதி) என்று குறிப்பிட்ட பிறகு, ‘அர்ரஹ்மானிர் ரஹீம்’ (அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன்) என்று குறிப்பிட்டிருப்பது, அச்சமூட்டியபின் ஆர்வமூட்டும் வகையைச் சேர்ந்ததாகும். அதிபதி (ரப்) எனும் எடுப்பான பெயர் அல்லாஹ்வைப் பற்றி ஒருவித அச்சத்தை நமக்கு ஏற்படுத்தினாலும், அருளாளன் மற்றும் அன்புடையோன் ஆகிய பெயர்கள் நமக்கு அவனிடம் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வகை வசனங்கள் குர்ஆனில் மேலும் பல உள்ளன.

அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) என்அடியார்களுக்கு அறிவிப்பீராக: நான் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த அன்புடையோனும் ஆவேன். (அதே நேரத்தில்,) நிச்சயமாக நான் அளிக்கும் வேதனை, வதைக்கும் வேதனையாக இருக்கும். (15:49,50)

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: உம்முடைய இறைவன் விரைவாகத் தண்டிப்பவன் ஆவான். (அதே நேரத்தில்,) நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்போனும் அன்புடையோனும் ஆவான். (6:165)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் இறைவன் அளிக்கும் தண்ட ணையைப் பற்றி அறிவாரானால், (அதிலிருந்து தப்பித்தால் போதும் என விரும்புவாரே தவிர,) சொர்க்கத்தின் மீது ஆசை கொள்ளமாட்டார். இறைமறுப்பாளர் இறைவனின் கருணையைப் பற்றி அறிந்தால், அந்தக் கருணையின் மீது நம்பிக்கை இழக்கமாட்டார்.46